சச்சினை நான் வெறுக்கிறேன்..

11/20/2009 11:25:00 AM

(8) Comments


நான் சச்சினை வெறுக்க காரணங்கள் பத்து..


மொழிபெயர்க்க நேரம் இல்லை.. மன்னிக்கவும்..
இதை சொடுக்கி அங்கே போய் வாசியுங்கள்..



ஒரு விளம்பரம் தான்.. ஹீ ஹீ..



இலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..

11/20/2009 12:34:00 AM

(15) Comments



இதை நான் பதிவிட ஆரம்பிக்கும்போது இலங்கை அணிக்கு ஒரு மகத்தான கன்னி டெஸ்ட் வெற்றியை இந்தியாவில் பெறும் வாய்ப்பு அஹ்மேதாபாதில் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

நாளைய இறுதி நாளில் இன்னும் எட்டு இந்திய விக்கெட்டுக்களை எடுக்கவேண்டும்.. ஆனால் ஆடுகளத்தில் படுத்துக் கிடந்தது இலங்கையின் வெற்றியைத் தடுக்கக்கூடிய டிராவிட் காலி..

எந்தப் பந்துவீச்சாளருக்கும் உதவி,ஒத்தாசை தராத ஒரு (flat pitch) ஆடுகளமாக இருந்தபோதும் (சுனில் கவாஸ்கர் குஜராத் அரசுக்கு வீதிகளை சீராக, செப்பனாக அமைக்க இந்த மைதானப் பராமரிப்பாளரை அணுகச் சொல்லி பகிரங்க நக்கலடித்திருந்தார்) இன்று கொஞ்சம் அதிகமாகவே பந்து திரும்புவதையும், மேலெழும் தன்மை மாறுபடுவதையும் (variable bounce) பார்த்தால் நாளை ஆடுகளம் முரளி,ஹேரத் சொல்வதைக் கேட்கும் ஆடுகளமாக மாறலாம் என் நினைக்கிறேன்.

இன்று மிஸ்ராவின் சில பந்துகளும்,நேற்று சச்சினின் பந்தும் திரும்பிய கோணங்களைப் பார்த்த்திருந்தால் முரளி நிச்சயம் மகிழ்ந்திருப்பார். ஆனால் வழக்கத்தை விடக் கொஞ்சம் வேகமாகப் பந்தை தள்ளிவிடவேண்டி இருக்கும். இல்லாவிட்டால் மிக மெதுவான இந்த ஆடுகளத்தில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் குந்தி இருந்து படையல் எடுப்பார்கள்.

இனி போட்டியில் இலங்கை வெல்வதும், சமநிலையில் போட்டி நிறைவடைவதும் முரளி,ஹேரத் ஆகியோரின் கைகளிலும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் பொறுமையிலும் தான் தங்கியுள்ளது.

இலங்கை அணிக்கு இன்னும் ஓவர்கள் இருக்கின்றன இந்திய அணியை அள்ளி சுருட்டுவதற்கு..முடியுமா?

அண்மைக் காலமாக 'பழைய' பயங்கரமான முரளியைப் பார்க்காத எமக்கு ஒரு வாய்ப்பு.. இதுவரை காலமும் இந்திய மண்ணில் பெரியளவில் பிரகாசிக்காத முரளிக்கும் தன்னை இறுதியாக ஒருமுறை நிரூபிக்க அருமையான வாய்ப்பு.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மகேல ஜெயவர்த்தன ஆடுகளத்தில் நின்ற நேரம் வரை எத்தனை சாதனைகள் உடைந்து விழுந்திருக்கின்றன.

இது போல ஆடுகளங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாராவது சப்பைக் கட்டு கட்டுவீர்களாக இருந்தால், உலகில் தற்போதுள்ள எல்லா ஆடுகளங்களின் தன்மைகளையும் பரீட்சித்துவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறேன்..
தென் ஆபிரிக்கா,மேற்கிந்தியத்தீவுகள்,பாகிஸ்தான் ஆடுகளங்கள் கூட இப்படித் தான்..

எனவே எல்லோராலும் முடியாது இது போல துடுப்பெடுத்தாட..
டிராவிட், மஹேல போன்ற நேர்த்தியான,நுணுக்கமறிந்த துடுப்பாட்ட சிற்பிகளால் தான் இவ்வாறான அருமையான ஆட்டங்களைக் கட்டியெழுப்ப முடிகிறது.

முச்சதங்களை இரண்டு தரம் பெற்ற மூவரோடு நாலாமவராக (அந்த மூவர் பிரட்மன், லாரா, சேவாக்)இணையும் வாய்ப்பை தவறவிட்ட மகேல பல்வேறு ஏனைய மைல் கற்களையும், சாதனைகளையும் தாண்டி இருக்கிறார்.

சத்தமில்லாமல் சாதனைகளைப் படித்துக் கொண்டிருக்கும் இருவராக நான் கிரிக்கெட்டில் கருதும் மூன்று எளிமையான,அமைதியான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் - மகேல, டிராவிட், சந்தர்போல்..

மற்றவர்களின் அதிரடி,ஆர்ப்பாட்டங்கள் வெளியே அவர்களை ஹீரோக்களாக்க இவர்கள் அணிக்கு பின்னணியாக,தூணாக இருந்து தேவையானபோது காப்பாற்றவும்,தேவையானபோது வென்றுகொடுக்கவும் துணை நிற்கிற ஆணிவேர்கள்.

இரு சுவர்கள்.. கிரிக்கெட் இன்னும் கனவான்களின் ஆட்டம் தான்..

டிராவிடை இந்திய சுவர்(wall) என்று சொல்வது போல, மகெலவை இலங்கையின் சுவர் என்று சொன்னால் அது மிகப்பொருத்தமே.

இப்போது வந்த பொடிசுகள் வெளியே பிரம்மாண்டமாகக் காட்டப்படும் இன்றைய நவீன விளம்பர விளையாட்டுலகில், எத்தனை பேருக்கு மஹேல,டிராவிட் ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளில் சதங்கள் பெற்றிருப்பது தெரியும்?

இருவரும் இப்போது ஒரே போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் சரித்திரப் பிரசித்திபெற்ற சேர்.கார்பீல்ட் சொபெர்சை முந்தியுள்ளனர்.

டிராவிட் 11000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்ற அதே போட்டியில் மஹேல 9000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

இவருக்கு முன்னர் எட்டு பேர் மாத்திரமே ஒன்பதாயிரம் டெஸ்ட் ஓட்டங்கள் தாண்டியவர்கள்.

கடந்த வருட வரலாற்றில் இந்திய மண்ணில் இலங்கை வீரர் யாரும் பெற்றிராத இரட்டை சதத்தை மஹேல அடைந்துள்ளார்.
அத்துடன் யூனுஸ் கான் வைத்திருந்த, இந்திய மண்ணில் ஒரு வெளி வீரர் வைத்திருந்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை (267 ) என்ற சாதனையும் மகேலவினால் மேவப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பதினோரு வருடங்களாக இந்திய மண்ணில் இலங்கை வீரர் ஒருவரும் சதம் பெற்றிராத குறையினை டில்ஷான் தீர்த்துவைத்தார்.. மஹேல மேலும் அதிகமாக சென்று இரட்டை சதத்தையும், விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்த்தன 150ஐயும் பெற்றுக் கொண்டார்.

எனது முன்னைய இந்தத் தொடர் பற்றிய முன்னோட்டப் பதிவில் நான் குறிப்பிட்டது போல, பிரசன்ன தன துடுப்பாட்ட ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கா இனியும் சந்தேகம் வேண்டாமே..

ஆனால் பாவம் பிரசன்ன, தனது அற்புதமான திறமையை இன்றைய நாளில் காட்டினாலும், மகேலவின் அற்புதத்தின் முன்னாள் பிரசன்னவின் சதம் அதிகம் பேசப்பட்டு பொருளாக மாறமுடியாமல் போயிற்று.

பிரசன்ன - மகேலவின் இணைப்பாட்டமும் (351 )ஒரு சரித்திரம் ஆகியுள்ளது.72 வருட காலம் நிலைத்திருந்த டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தின் ஆறாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை முறியடித்துள்ளார்கள் இந்த ஜெயவர்த்தனேக்கள். (இதற்கு முன்னர் பிரட்மனும், பிங்கில்டனும் இந்த சாதனையை தம் வசம் வைத்திருந்தனர்)

இதுமட்டுமன்றி இந்த இணைப்பாட்டம் எந்த ஒரு அணியினாலும் இந்திய அணிக்கேதிராகப் பெறப்பட்ட மூன்றாவது பெரிய இணைப்பாட்டமாகும்.

மொத்த ஓட்ட எண்ணிக்கையிலும் ஒரு அதிசயிக்கத்தக்க சாதனை.. இந்திய மண்ணில் பெறப்பட்ட மிகக் கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவே..
இதற்கு முன் இந்திய அணி 23 வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கெதிராக 676 ஓட்டங்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

அத்துடன் இலங்கை அணியினால் வெளிநாடொன்றில் பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவே.

மஹேல - ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல்

மகேலவைப் பலரும் உள்நாட்டில் மட்டும் ஓட்டங்கள் குவிப்பவர்;வெளிநாடுகளில் சறுக்குபவர் என்று கண்மூடித்தனமாகக் கருத்துக் கூறும் நிலையில், அவரது சில சாதனைக் குறிப்புக்களைக் கவனத்தில் எடுப்பது நல்லது..

கடைசியாக அவர் விளையாடிய முப்பது டெஸ்ட் போட்டிகளில், 3706 ஓட்டங்களை 77 .45 என்ற சராசரியில் குவித்துள்ளார்..
இதில் 15 சதங்கள், 7 அரை சதங்கள்.. இந்த சத்தங்களில் ஏழு வெளிநாடுகளில் பெறப்பட்டவை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டில்..
இதுவரை மஹேல சதம் குவிக்காத ஒரே நாடு தென் ஆபிரிக்கா மட்டுமே..
இது போதுமா?

இது மட்டுமன்றி இந்திய அணிக்கெதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் மகேலவின் சராசரி ஐந்து சதங்களோடு 79.77.
இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவராகவும் மஹேல மாறியுள்ளார்.

உலக சாதனையாளர் சச்சின் 28 இன்னிங்க்சில் பெற்ற 1412 ஓட்டங்களை, மஹேல 19 இன்னிங்க்சில் முந்தியுள்ளார்.

இன்னொரு சுவாரஸ்ய சாதனை..

அதிக இரட்டை சதங்களைப் பெற்றோர்..
பிரட்மன் 12 , லாரா 9 , ஹம்மன்ட் 7 .. என்ற வரிசையில் ஆறு இரட்டை சதங்கள் பெற்ற நால்வரில் மூவர் இலங்கை வீரர்கள்.

பாகிஸ்தானின் ஜாவேத் மியன்டாட் தவிர, மார்வன் அத்தப்பத்து, குமார் சங்கக்கார மற்றும் தற்போதைய ஹீரோ மஹேல.

இப்படியே மஹேல தொடர்ந்து பிரகாசித்தால் அவருக்கு இப்போது தான் 32 வயதாவதால், சச்சின், பொன்டிங் ஆகியோருக்கு ஒரு ஆரோக்கியமான போட்டியைக் கொடுக்கலாம்.. ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை தான் இலங்கைக்கு அதிக டெஸ்ட் போட்டிகளை வழங்காத சாபக்கேடும் தொடர்கிறதே..

இலங்கை வீரர்கள் இத்தனை சாதனை படைத்த இன்றைய நாளில், இந்தப் போட்டியில் இந்திய வீரர்களுக்கு பல வேண்டாத அவமானங்கள் வந்து சேர்ந்துள்ளன.

இந்திய சுழல் பந்துவீச்சாளர்களால் வழங்கப்பட்ட மூன்றாவது அதிகூட்டிய ஓட்டங்கள் இவை (495 ). இலங்கை உலக சாதனை படைத்தபோது இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் எழுநூறு ஓட்டங்களை கொடுத்திருந்தார்கள்.

இந்திய மண்ணில் ஒரு இந்திய சுழல்பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டங்களை கொடுத்தார் அமித் மிஸ்ரா.. 61 வருடங்களுக்கு முன்னர் வினு மன்கட் கொடுத்திருந்த ஓட்டங்களை இன்று முந்திக் கொண்டார்.

ஹர்பஜனின் மோசமான பந்துவீச்சுப் பெறுதி இது தான்.. (இன்னுமா உலகம் இவரை நம்பிக்கிட்டு இருக்கு? என் சார்பாக இலங்கை அணி இவர் முகத்தில் குத்தியுள்ளது சந்தோசமே..)

நான்கு இந்தியப் பந்து வீச்சாளர்கள் இந்திய மண்ணில் ஒரே இன்னிங்க்சில் நூறு ஓட்டங்களுக்கு மேல் வழங்கிய நான்காவது சந்தர்ப்பம் இது.

ஒரே டெஸ்டில் இரு அணியினதும் விக்கெட் காப்பாளர்கள் சதமடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இது.
இதற்கு முன்னரும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டி ஒன்றிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்தது.
2001 இல் இந்தியாவின் அஜய் ரத்ராவும், மேற்கிந்தியத் தீவுகளின் ரிட்லி ஜகொப்சும் சதங்கள் பெற்றனர்.

நாளை ஒரு தீர்க்கமான நாள். இந்திய வீரர்கள் பொறுமையோடும்,நிதானத்தோடும் ஆடினால் தோல்வியிலிருந்து தப்பலாம்.

இலங்கை அணி தகுந்த நெருக்கடிகளை வழங்கினால் மேலும் துல்லியமாகவும், சமயோசிதமாகவும் பந்துவீசினால் புதிய சரித்திரம் படைக்கலாம்.

எத்தனை தடவை முற்கூட்டியே ஊகம் சொல்லி மூக்குடைபட்டாலும் அதில் ஒரு சுவாரஸ்யமும் த்ரில்லும் தான்..

இம்முறையும் அந்த வகையில் நான் சொல்வது..ஆடுகளம்,இந்தியாவின் நம்பகமான துடுப்பாட்ட வரிசை என்று பல காரணங்கள் இருந்தும் என்னைப் பொறுத்தவரை இலங்கை அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
அஹ்மேதாபாத் இலங்கையின் கிரிக்கெட்டின் புதிய சரித்திரத்தை எழுதும் என நம்புகிறேன். (சங்கா +முரளி குழுவினரே..மறுபடி கரி பூசாதீங்கப்பா..)

இந்திய அணிக்கு நாளை காவல் தெய்வங்களாக கம்பீர், சச்சின், தோனி ஆகியோர் தான் இருக்கக் கூடும்.. லக்ஸ்மன்,யுவராஜ் மீது எனக்கென்னவோ நம்பிக்கை வைக்க தோன்றவில்லை.

அதிலும் இந்திய வீரர்கள் இவ்வாறான நெருக்கடியான நேரங்களில் மனம் தளர்ந்து போவதும்,பதற்றமடைவதும் இலங்கை அணிக்கு சாதகமான விஷயங்கள்

ஆனால் முரளி தனது மாயாஜாலங்களை காலை முதலே காட்டாவிட்டால்.. மதியத்துக்குப் பிறகு நாம் கொட்டாவி விட்டுக் கொண்டே வேறு அலைவரிசைகளை மாற்றி படமோ,பாட்டோ பார்க்கலாம்..

போட்டியில் இலங்கை சிலசமயம் வெல்லாவிட்டாலும் மஹேல என்றொரு இலங்கையின் சுவர் தன்னை விஸ்வரூபப் படுத்தி மீண்டும் காட்டி இருப்பது பெருமையான விஷயமே..



மறக்க முடியாத நவம்பர்!

11/17/2009 10:55:00 PM

(22) Comments


நேற்று கொழும்பு அமெரிக்க நிலையத்தில் இடம்பெற்ற ஓவியக்கண்காட்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பரொருவரின் ஓவியக்கண்காட்சி அது. சிரேஷ்ட முகாமைத்துவத்திலுள்ளவன் என்பதனால் வந்திருந்த அதிதிகளுடன் என்னையும் விளக்கேற்றவும் புகைப்படம் பிடிக்கவும் அழைத்தார்கள்.

பிரதம அதிதியாக வந்திருந்தார் ஒரு அமைச்சர். எனக்கும் கைலாகு கொடுத்து சிரித்துப் பேசிவிட்டுப் போன பிறகுதான் அவர் யாரென்றே ஞாபகம் வந்தது.....

கடந்த வருடம் இதே நவம்பரில் கிட்டத்தட்ட இதே நாட்களில் (சரியாக நவம்பர் 18ம் திகதி) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் என்னைத் தற்கொலை போராளியுடன் சம்பந்தமுடையவன் என்று அறிவித்த அதே ஊடகத்துறை அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன.

அன்று குற்றவாளி - இன்று அமைச்சருடனேயே சேர்த்து ஒரு அதிதி!

காலம் எப்படியெல்லாம் மாறுகிறது.

......................
மறக்க முடியாத நவம்பர் மாதத்தின் ஒருவார வடுக்கள் கொஞ்சம் மறைந்துபோய், நான் முன்பு போல் சகஜமானாலும், சந்தோஷமாகவே இருந்தாலும் இப்போதும் அந்த நாட்களை நினைக்கும்போது உள்ளேயுள்ள அப்பாவிகள் பலரின் முகங்கள், அவர்களில் சிலரின் அவலக்கதைகள் நிழலாடுகின்றன.

எனக்கான குரல்கள் ஒலித்தன! அவர்களுக்கு யார் உள்ளார்கள்?

பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!



கமல்,சுஜாதா,அசின்,SPB ஒரே கட்சியில்..

11/17/2009 12:25:00 PM

(62) Comments


தொடர் பதிவுகள் என்றாலே தொந்தரவு என்று விலகிச்செல்லும் பலநேரம் இருந்தாலும், ஒருசில தொடர் பதிவுகளை வாசிக்கும் போது யாராவது என்னையும் இந்தத்தொடர் பதிவிற்கு அழைக்கமாட்டார்களா என்று ஆசையும் வரும்.

அப்படிப்பட்ட மூன்று தொடர் பதிவுகளை அண்மையில் பல பதிவுகளில் வாசித்திருந்தேன். அதில் ஒன்றுக்கு அன்புத் தம்பி சுபாங்கன் என்னை அழைத்துள்ளார்.

மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறேன்.

மூலப்பதிவிலிருந்து சுவைக்காக ஒரு சில விடயங்களை மட்டும் மாற்றிவிட்டேன்.

இதோ எனக்குப்பிடித்த என்னுடைய கட்சிக்காரர்களும், எதிர்க் கட்சிக்காரர்களும்..

எழுத்தாளர்&கவிஞர்

பிடித்தவர் : சுஜாதா

எழுத்து நடை, சிந்தனைப்போக்கு, காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்ட திறன், எதிர்காலத்தைப் பற்றி நிகழ்காலத்திலேயே சிந்தித்தவர் என்று இவர் பற்றி ஏராளம் சொல்லலாம். இவரது எழுத்து சிறுவயது முதலே என்னை கவர்ந்தது. சுஜாதாவின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது.
: வைரமுத்து
சிறுவயது முதலே இவரது பாடல்களால் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும் நேசித்தேன்.

இவர்களிருவரையும் ஏன் பிடிக்கும் என்று எழுதப்போனால் ஒரு தனிப்பதிவே போடலாம்.அநேகமாக இவர்கள் இருவரதும் எல்லா நூல்களுமே நான் வாங்கிவைத்துள்ளேன்.


பிடிக்காதவர்: ஞானி (ஆவி ஞானியே தான்.அதாவது ஆனந்த விகடன் ஞானி), சோ வகையறாக்கள்.திடமான கொள்கையற்றவர்கள்; தாம் சாதிக்காமல் போதிக்க நினைப்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் திணிப்பதோடு இவர்களின் சில பிற்போக்கான சிந்தனைகள் எரிச்சலூட்டும்.

சிறுகதை என்று சிறுவர்களுக்கான கதைகளும். கவிதை என்று கதைகளை எழுதி வதைப்போரும், தமக்குத்தாமே 'கவிஞர்' மகுடம் ஒட்டிக்கொள்வோரும் கூட எனது பிடிக்காத எழுத்தாளர் பட்டியலில் உள்ளார்கள்.




நடிகர்

பிடித்தவர் : கமல்ஹாசன்

என்ன இவரிடம் இல்லை?
பிறவிக்கலைஞன், தாகம், தேடல், முயற்சி, பரந்த அறிவு எனப் பிடித்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


பிடிக்காதவர்: விஜய் என்று சொல்வேன் என்று நினைத்தால் தப்பு!
இவரை விட பிடிக்காத பெரிய பட்டியலே உள்ளது. நினைத்தாலே மனதில் சொல்லொணா எரிச்சல் வருகிற, மூஞ்சியில் மூன்று குத்துவிடலாம் என நினைக்கிற சிலர் – பிரஷாந், மனோஜ், முரளி, விக்ராந்த், 'ஆனந்த தாண்டவம்' ஹீரோ.. பெயரும் ஞாபகம் வருதில்ல

நடிகை

பிடித்தவர் : அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி

பின்னிருவரின் திருமணத்தின் பின்னதான ஓய்வின் பின் அசின் தான் என்னைக் குத்தகை எடுத்துள்ளார்.
மூவரதும் இயல்பான அழகு, ஆபாசமில்லாத நடிப்பு, பாத்திரமுணர்ந்த உணர்வு வெளிப்பாடுகள் இவைமட்டுமன்றி, மூவரின் கண்களும், உதடுகளும் அவர்களது சமகாலத்தவரை பின்தள்ளிவிட்டனர்.


பிடிக்காதவர்: த்ரிஷா, ஷ்ரேயா, ராதிகா

நடத்தை, நடிப்பு, dressing sense என்று எதுவுமே இவர்களிடம் எனக்கு பிடிப்பதில்லை. ரசித்ததைவிட அருவருத்ததே அதிகம். (த்ரிஷா, ராதிகாவின் வெகுசில படங்கள் பிடித்தவை)


இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம், பாசில், கமல்ஹாசன்

இம்மூவரினது இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தையும் நான் இதுவரை தவறவிட்டதில்லை. அவற்றுள் எந்தவொன்றும் பிடிக்காமல் போனதுமில்லை. என் ரசனைக்குகந்த விஷயங்களை, மேலும் தரமான ரசனையோடு தரும் சிற்பிகள்.


பிடிக்காதவர்: பேரரசு
மொக்கையை கூட ரசிக்கலாம் இது சக்கை.
கொடுமையோ கொடுமை.
இதுல வேற நடித்தும், பாடல் எழுதியும் வேறு கொல்கிறார். இனி இசையமைக்கவும் போறாராம்!
தாங்காது சாமி தாங்காது.

பாடகர்

பிடித்தவர்: எப்போதும் SPB
நடிப்புக்கு கமல் என்றால் பாடலுக்கு பாலு தான்!
திறமைகளும் அவற்றால் வந்த சாதனைகளும் குவிந்திருந்தாலும் தலைக்கனம் ஏறாத ஒரு அன்பு மலை! பண்பும், பணிவும், எந்தப்பாடலையும் ரசிக்க வைக்கும் அந்த ஈடுபாடும், இளையோரை ஊக்குவிக்கும் நல்ல மனதும் பிடிக்கும்.

வித்தியாசமான குரல்வளம் கொண்ட அருண்மொழியும் பிடிக்கும்.


பிடிக்காதவர்: தமிழில் பாடுகிறோம் என்று கொடுமையாகக் காதுகளில் ஈயம் கரைத்து ஊற்றித் தமிழைக்கொலை செய்யும் சுக்வீந்தர் சிங் மற்றும் உதித் நாராயணன்.


பாடகி

பிடித்தவர் : P.சுசீலா

தாய்மையின் கனிவு, காதலின் ஏக்கம், மனைவியின் அன்பு, தமிழின் இனிமை, பெண்மையின் இயல்பு என்ற அத்தனையையும் சம விகிதத்தில் கலந்த இந்தக் குயில் குரலின் பல பாடல்களில் மனதைத் தொலைத்தவன் நான்.

இவர் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றது வாழ்நாளில் மிகப்பெருமையான விஷயம்.

சித்ரா, சுஜாதா அண்மைய புதிய பாடகி ஷ்ரேயா கோஷல், கல்யாணியும் இவரது சாயலுடையவர்கள் என்பதால் பிடிக்கும்.


பிடிக்காதவர் : மதுஸ்ரீ

A.R.ரஹ்மான் தமிழ்த்திரைப்பட பாடல்களுக்குத் தந்த சாபம்! இசைப்புயலின் இசையில் மட்டும் ஓரளவு திருத்தமாகப்பாடி மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் தமிழை வன் புணர்ச்சி செய்கிறார். இவரது தமிழ்க்கொலை தாங்காமல் இவரது சில பாடல்களை நான் ஒலிபரப்புவதே இல்லை.


இசையமைப்பாளர்

பிடித்தவர் - வித்யாசாகர்

முன்பிருந்தே இவர் மீது ஒரு கிறக்கம்,அனுதாபம்,இவரது மெட்டுக்கள் கேட்டு ஆச்சர்யம்.
இசைஞானி-இசைப்புயல் இருவரையும் ஈடு கொடுக்கக்கூடிய இசை ஞானம்.
பல மிகப் பெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தும் பெரியளவில் பேசப்படவில்லை.
மிகப் பெரும் ஹிட் பாடல்கள் கொடுத்தான் முன்னணி இசையமைப்பாளராக யாரும் ஏற்கிறார்கள் இல்லை என இவர் மீது ஒரு எனக்கு ஒரு இரக்கம் உள்ளது.


பிடிக்காதவர் - கார்த்திக் ராஜா

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா கேட்ட பிறகு பெரிதாக வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்ததோ என்னவோ இவர் மீது கோபமாக உள்ளது.
இவரது மெட்டுக்கள் எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.
விதிவிலக்கு - அடியே கிளியே -குடைக்குள் மழை

கிரிக்கெட் வீரர்

பிடித்தவர் -
பலபேர் இருந்தும்.. சட்டென்று மனதில் வருபவர் ரொஷான் மகாநாம. எளிமையான,நல்ல மனிதர். நேர்மையான நேர்த்தியான விளையாட்டுவீரர்.

பிடிக்காதவர் -
ஹர்பஜன் சிங்.. கண்டால் முகத்தில் ஓங்கிக் குத்துவிடவேண்டும் போல் இருக்கும் ஒரே ஒருவர் இவர் மட்டும்.
இவருக்கு அடுத்தபடியாக இவரது 'நண்பர்' ஸ்ரீசாந்தும் இருக்கிறார்


அரசியல்வாதி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
காரணம் பிடித்தவராக யாருமே இல்லை. (உயிருடன்)
பிடிக்காதவர் என்று யாரை சொல்வது என்று தெரிவுக் குழப்பம்.

இந்த தொடர் பதிவை தொடர நான் அழைக்கும் நால்வர் -







அரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்

11/16/2009 03:02:00 PM

(17) Comments


அரசியல் - தலைவர் vs தளபதி

இலங்கை அரசியலே ஒரு விளையாட்டு போலத்தான்!

அது கால்பந்தாக இருந்தால் பந்து - மக்கள்
கிரிக்கெட்டாக இருந்தாலும் பந்து நாம்தான்!

சில மாதங்களுக்கு முன் மிகத் தெளிவாக இருந்த இலங்கை அரசியல் வானிலை இப்போது மிகக் குழம்பியுள்ளது. அடுத்து மழையா, புயலா என யாருக்குமே ஊகிக்கமுடியாதுள்ளது.

இராணுவ வெற்றிகளின் அத்திவாரத்தில் உறுதியாக தனது அரசாங்கக் கட்டடத்தை பெரிதாக விஸ்தரித்து வந்த இலங்கை ஜனாதிபதிக்கு – அத்திவாரத்திலிருந்தே சிக்கல் ஆரம்பித்துள்ளது.

அரசியல் vs இராணுவம்
ஜனாதிபதி vs முப்படைகளின் பிரதானி

என்று அடுத்த வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டான கணிப்புக்கள், கருத்துக்கள் கடந்த வாரம் முழுவதுமே பரபரப்பைத் தந்திருந்தன.

தலைவராக, தளபதியாக.. இப்போது நேருக்கு நேர்..

இராணுவப்புரட்சி
பொதுவேட்பாளர்
இராஜினாமா
இந்திய உறவு
சீன ஆதரவு
பாகிஸ்தான் பின்னணி

இவைதான் இந்த சிலநாட்களில் அதிகம் பேசப்பட்ட, எழுதப்பட்ட. கேட்ட, வாசித்த வார்த்தைகள்.

சரத் பொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரோ இல்லையோ ஊடகங்களும் , சில எதிர்க்கட்சிகளும் அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றியே இறக்கி விட்டு விடும் போல் தெரிகிறது.
விடும் என்ன விட்டாச்சு..

பொன்செக்காவுக்கு ஆதரவாக,எதிர்ப்பாக என்று பல அமைப்புக்கள்,குழுக்கள்,இணைய ஊது குழல்கள் ஒருபக்கம்..
ஜனாதிபதியை ஆதரிக்கும் குரல்கள் ஒருபக்கம்..
அவருக்கு ஆதரவாக அரச இயந்திரங்கள் முழுமூச்சில்..
யுத்தவெற்றியின் பின் காரணமாக இப்போது ஜனாதிபதியைக் காட்டும் பெருமுயற்சி வேறு..

இலங்கை அரசியல் மந்தநிலை தாண்டி களைகட்டி நிற்கிறது.
பாவம் ரணில் தான் மறக்கப் பட்டவராக ஒதுக்கப்பட்டு நிற்கிறார்.

அத்தோடு முகாமில் உள்ளோரின் மீள் குடியேற்றும் கதையும் கொஞ்சம் அடிபட்டு பின் தள்ளப்பட்டு நிற்கிறது.

எம்மவரும் பொன்சேக்கா தாம் சொல்லும் சிலவிஷயங்களை ஒத்துக் கொண்டால் ஆதரவளிப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை?

கடந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்ததன் விளைவு இன்று தெரிகிறது. இம்முறை என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் மக்கள்?

தெரிந்த ரட்சகரா? இல்லை தெரியாத புதிய சமாதான தூதுவரா?

சிங்களவர் இந்த புதிய பொன்சேகா அலையில் முற்று முழுதாக மாறுவார்கள் என நான் நினைக்கவில்லை.
தீர்மானிக்கும் மற்றொரு சக்தியான முஸ்லிம்களும் ஜனாதிபதியைக் கைவிடுவார்கள் எனத் தோன்றவில்லை.

ஜனாதிபதியும் சரத் பொன்சேகா கொஞ்சம் பரபரப்பாக எழுந்து நிற்கும் வேளையில் அவசரப்பட்டு தேர்தல் வைத்து தனக்கு தானே குழிவெட்டப் பார்க்கார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் வைத்து தேர்தல்/தேர்தல்கள் திகதியை/களை அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு இருந்தாலும், வந்திருந்தோரைக் கைதூக்க வைத்துவிட்டு அந்த எதிர்பார்ப்பை எல்லாம் புஸ்ஸ் ஆக்கி விட்டார் ஜனாதிபதி.

அத்துடன் தனது உரையில் தேசத் துரோகி என்று மறைமுகமாக சரத் பொன்சேக்காவை சாடியதும்,(இம்முறையும் தமிழில் உரையாற்றியிருந்தார்.. உணர்ச்சி இருந்த போதும், உச்சரிப்பு உதித் நாராயணனை விட மோசம்) ஜனாதிபதியின் செயலாளர் ஜனாதிபதி,அரசாங்கத்தின் நம்பிக்கையை சரத் பொன்சேக்கா இழந்ததனாலேயே அவரது பதவி விலகலை உடனே ஏற்றதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லி இருப்பதும் சரத் பொன்சேக்கா இனி மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

இதற்குள் இந்தியா நேரடியாகவே தனது சரத் பொன்சேக்கா மீதான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

பிரணாப் முகர்ஜியின் விஜயம் இங்கு நடைபெறும்போதே இணை அமைச்சர் சஷி தரூர் இந்தியாவிடம் ஆயுத உதவிகளை வழங்குமாறு இலங்கை கேட்டதாக பொன்சேக்கா சொன்னது பொய்யான தகவல் என்று சொல்லி தங்கள் ஆதரவு என்றும் மகிந்தருக்கே என்று குறி காட்டிவிட்டார்கள்.

இன்று தனது பிரியாவிடை உரையை ஆற்றி உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று முழுநேர 'பொது' பணியில் ஈடுபட ஆயத்தமாகிவிட்டார் முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேக்கா..

அத்துடன் அவரது போட்டியாளராக எதிர்காலத்தில் இருக்கக் கூடிய ஜனாதிபதியுடன் ஒரு மணிநேர சந்திப்பையும் நிகழ்த்திப் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்..

எனக்கொரு டவுட்டு..

அப்பிடி ரெண்டு பெரும் என்ன பேசியிருப்பினம்?

அப்போதே பின்னாலிருந்து பார்க்கும் பார்வை சொல்வதென்ன?

தலைவரும் தளபதியுமாக இருந்தவர்களை இப்போது நேரெதிராக மோதவிட்டு காலம் ஆடும் ஆட்டத்தைப் பாரீர்..
இன்னும் பல விஷயங்கள் அரங்கேறும்..
பல விளையாட்டுக்கள் பலரால் விளையாடப் பட இருக்கின்றன.

எனக்கென்ன நான் ஓரமா இருந்து எல்லாம் பார்க்கப் போகிறேன்..
நான் தான் விளையாட்டுப் பிள்ளை/விளையாட்டுப் பிரியனாச்சே..

================

விளையாட்டு 1 - அதிரடி ஆட்டம்

நேற்று வீட்டில் இருந்ததால் தென் ஆபிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ட்வென்டி ட்வென்டி போட்டியைப் பார்த்தேன்.

ஸ்மித்-பொஸ்மன் இணைப்பாட்டம் உலக சாதனை..(170 for the 1st wicket) பத்து ஓவர்களுக்குள் பறந்த சிக்சர்களும் பவுண்டரிகளும் இதென்ன ஹைலைட்டா பார்க்கிறேன் என்று எண்ணவைத்தது.

பொஸ்மனின் அதிரடியாட்டம் பார்த்தால் ஹெர்ஷல் கிப்சுக்கு இனி தென் ஆபிரிக்க அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.

ட்வென்டி ட்வென்டி சரித்திரத்தில் இரண்டாவது சதம் பெறும் வாய்ப்பு பொஸ்மனுக்கு இருந்தபோதும் அந்த கருப்பு சிங்கம் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது சோகம்.

நல்ல காலம் இலங்கையின் சாதனை இருபது ஓட்டங்களால் தப்பியது.

இந்த அதிரடிக்குப் பிறகு இங்கிலாந்தின் பதிலடியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்ததால் வேறு அலைவரிசை மாற்றிவிட்டேன்.

தென் ஆபிரிக்க தேர்வாளர்கள் நல்லதொரு விஷயம் செய்கிறார்கள்.தமது அடுத்த கட்டத்தை தயார்படுத்துகிறார்கள்.
இந்த இரு போட்டிகளில் எதிர்காலத்துக்குரிய வீரர்களான ரயான் மக்லறேன், ஹெய்னோ குன், புகழ் யூசுப் அப்துல்லா ஆகியோரைக் களம் இறக்கியுள்ளார்கள்.

===============

விளையாட்டு 2 - மாட்டிக் கொண்ட மரடோனா

அர்ஜென்டீன அணியின் கால்பந்து பயிற்றுவிப்பாளர் டீகோ மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால்(FIFA) இரு மாத காலம் தடை செய்யப்பட்டுள்ளார்.

என்னைப் போல அர்ஜென்டீன ரசிகர் எல்லாம் அண்மைக்காலமாக அர்ஜென்டீனா தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்தவருட உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறுமா என்று தவித்திருந்தவேளையில், கால்பந்து வெறியரான அர்ஜென்டீன ரசிகர்கள் மரடோனா ஒழுங்காக பயிற்றுவிக்கிறார் இல்லை என அவர் மீது வெறியோடு திட்டி தீர்த்தும், வசை பாடியும் கொண்டிருந்தார்கள்.

எனினும் உருகுவே அணிக்கெதிரான வெற்றியோடு அர்ஜென்டீனா தகுதி பெற்றது.
அந்த வெற்றியைப் பெற்ற பின்னர் மரடோனா ஆவேசமாக நடந்து கொண்ட விதமும், ரசிகர்களையும் தொலைகாட்சி கமேராக்களையும் பார்த்து செய்த மகிழ்ச்சி ஆரவாரங்களுமே FIFAஇன் இந்த தண்டனை விதிப்புக்க் காரணம்.

இப்படித் தான் மரடோனா ஆவேசமாகக் கொண்டாடினார்..


தோத்தாலும் திட்டுறாங்க.. வென்றாலும் தண்டிக்கிறாங்க.. என்ன நியாயம்டா இது என்று மரடோனா புலம்புறாராம்..

நல்ல காலம் இப்பவே தண்டனை கிடைத்தது.. இல்லேன்னா பிறகு உலகக் கிண்ணத்துக்கு மரடோனாவின் சேவை அர்ஜென்டீனாவுக்கு கிடைக்காமல் போயிருக்கும்..





சரித்திரம் படைக்குமா இலங்கை அணி?

11/16/2009 09:05:00 AM

(8) Comments



சங்கக்காரவின் சபதம் நிறைவேறுமா என்பதும், தோனியின் தோல்விகள் துடைக்கப்படுமா என்பதும் - அண்ணன் தம்பியரில் அசத்தப்போவது யார் என்பதும் இன்று காலை இன்னும் சொற்பவேளையிலிருந்து தெரியப்போகிறது.


இறுதியாக இவ்விரு அணிகளும் கடந்த முறை இலங்கையிலே ஒரு டெஸ்ட் தொடரிலே சந்தித்தபோது - இலங்கையிடம் கண்ட தோல்விக்கு பழித்தீர்க்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.

இலங்கையிடம் தோல்வி கண்ட அணியிலிருந்த சௌரவ் கங்குலி, தலைமை தாங்கியிருந்த அணில் கும்ப்ளே ஆகியோர் தற்போது இல்லை.

ஓய்வு வேண்டும் என்று (அல்லது வேறு ஏதாவது காரணம் இருந்ததோ தெரியாது) அந்தத்தொடரிலிருந்து விலகியிருந்த தோனி இப்போது தலைவராக...

இந்தியாவுக்கு 2011 உலகக்கிண்ணம் முடியும்வரை வேறு எந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரும் இல்லாத காரணத்தால் மும்மூர்த்திகளான டெண்டுல்கர், டிராவிட், லக்ஸ்மன் ஆகியோரை ஒன்றாகவோ, தனித்தனியாகவோ போட்டிகளில் பார்க்கும் வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இதுவே இறுதியாக இருக்கும் எனக் கருதப்பட இடமுண்டு.

இதனால் இம்மூவரில் ஒருவரோ, இருவரோ தமது ஓய்வுபெறும் முடிவை இந்திய ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பர் என நினைக்கிறேன்.


3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு டுவென்டி டுவென்டி போட்டிகள் அடங்கிய முழுமையான தொடரொன்று விறுவிறுப்பைத் தருவதற்கு உத்தரவாதமளிக்கிறது. நீண்டகாலத்தின் பின்னர் இந்தியாவில் இலங்கை அணிக்கு இவ்வாறானதொரு பூரணமான தொடர் வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தரும் விடயம்.

அவசர ஏற்பாடுகளாக, ஏதாவதொரு தொடர் ரத்தாகும் நேரத்தில் இரு கிரிக்கெட் சபைகளில் ஒன்று மற்றொன்றைத் தொடர்புகொண்டு இடைக்கால ஏற்பாடாக கிரிக்கெட் தொடரொன்றை ஏற்பாடு செய்வதே அண்மைக்கால வழக்கமாக இருந்துவந்துள்ளது.

அடுத்த உலகக்கிண்ணப் போட்டிகளை நடாத்தும் பிரதான நாடுகளாக இவை இருப்பதனால் இன்றும் முக்கியத்துவத்தையும் இந்தத்தொடர் பெறுகிறது. அதிர்ஷ்டவசமாக டெஸ்ட் தரப்படுத்தல்களில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள இலங்கை அணிக்கு அந்த இடத்தை ஸ்திரப்படுத்தும் சவாலான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் என்ற உலகத்துடுப்பாட்ட சாதனையாளர். இலங்கை அணியில் உலகின் பந்துவீச்சு சாதனையாளர் முரளீதரன்.

இருவருமே தத்தம் சாதனைப் பாதைகளில் அத்தனை மைல் கற்களையும் தாண்டிய வண்ணம் தடையின்றி பயணித்த வண்ணமே இருக்கின்றனர். சாதனைகளை மேலும் விஸ்தரித்துக்கொள்ளும் அரிய சந்தர்ப்பம் முரளிக்கும், சச்சினுக்கும்.

மறுபக்கம் ஊசலாடும் கிரிக்கெட் வாழ்க்கையில் தம்மை நிரூபித்து மேலும் கிரிக்கெட் நாட்களை நீடித்துக்கொள்ளப்போராடும் ராகுல் டிராவிட், V.V.S.லக்ஸ்மன் (டெஸ்ட்) & சனத் ஜெயசூரிய (ஒருநாள் & T20).

சமிந்தவாஸை ஒதுக்கியதால் அனுபவமற்ற ஆனால் ஆற்றலுடைய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள்.
நுவன் குலசேகர, திலின துஷார இருவரும் அண்மைக்காலமாக முன்னேறிவரும் இரு வேகப்பந்து வீச்சாளர்கள். அண்மையில் நியூசிலாந்து அணியை உருட்டியதிலும், முன்னதாக பாகிஸ்தான் அணியைப் பதம் பார்த்ததிலும் தம்மை நிரூபித்தாலும், இந்திய ஆடுகளங்கள் இவர்களை நிச்சயம் சோதிக்கும்.

அதிலும் இந்தியாவின் பலம் வாய்ந்த அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசைக்கெதிராக இவர்கள் எதிர்கொள்ளப்போவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்தியாவுக்கு சாஹிர்கானின் மீள்வருகை பெரும் பலம் எனினும், அவரோடு இணை சேரப்போகிற இஷாந்த் ஷர்மா அண்மைக்காலமாக பிரகாசிக்கவில்லை; ஸ்ரீசாந்த் என்ன சொல்வார் என்று யாருக்குமே தெரியாது.
நம்பகமான இலங்கையின் துடுப்பாட்டவரிசையின் நால்வர் சரியாக செட் ஆனால் சுழல்பந்து வீச்சாளர்களையே நம்பவேண்டியிருக்கும்.

நால்வர் : குமார் சங்கக்கார, மகேல ஜெயவர்த்தன, திலான் சமரவீர, திலகரட்ண டில்ஷான்

மிக முக்கிய சிறப்பம்சம் இரு அணிகளின் தலைவர்கள். உலகின் தலை சிறந்த, நம்பகமான இரு துடுப்பாட்ட வீரர்களும், விக்கெட் காப்பாளர்களும் தலைவர்களாக ஒரு முழுமையான தொடரில் மோதுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இது.

இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காக்காவிட்டாலும் இந்தியத் தலைவர் தோனிக்கு விக்கெட் காப்பு வழங்கும் அதே அழுத்தத்தை சங்ககாரவின் 3ம் இலக்கத் துடுப்பாட்டப்பதவி வழங்கப்போகிறது.

உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வரிசையாகக் கருதப்படும் இந்தியாவின் சேவாக், கம்பீர், லக்ஸ்மன், டெண்டுல்கர், டிராவிட், யுவராஜ்சிங், தோனி என்ற பெயர்களோடு ஒப்பிடும்போது இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை இணையானதாகவும் தெரியவில்லை, அச்சுறுத்துவதாக இல்லை.

எனினும் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களாகக் கருதப்படக்கூடிய நால்வர் இலங்கை அணியின் துடுப்பாட்டத் தூண்களாக விளங்குவதால் இலங்கை அணியின் திறமையைக் கொஞ்சம் எதிர்பார்த்திருக்கலாம்.

டில்ஷானின் அதிரடி ஆரம்பம், மகேல, சங்கக்காரவின் ஓட்டங்களை மலையாகக் குவிக்கும் நம்பகத்தன்மை, சமரவீரவின் நின்றுபிடித்தல் என்பன இளமையுடன் இணையவிருக்கின்றன.

மறுபக்கம் இந்திய அணியின் சேவாக், கம்பீரின் அதிரடி – சச்சின் என்ற 20 வருட அனுபவ சாதனை, தோனி, யுவராஜின் அதிரடிகளுடன், டிராவிட் லக்ஸ்மன் என்ற அனுபவ ஆட்டக்காரர்களும் சேர்கையில் இந்தியத்துடுப்பாட்டம் ஒப்பீட்டளவில் பலமாகவே தெரிகிறது.

தலைவர் குமார் சங்கக்கார, மகேல ஜெயவர்த்தன, திலகரட்ண டில்ஷான், திலான் சமரவீர என்ற அந்த நால்வரும் ஒரே நேரத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியொன்றைப் பரிசளிக்கலாம்.

எனினும் இந்திய ஆடுகளங்களுக்கேயுரிய சுழல்பந்து வீச்சுக்கான சாதகத்தன்மை இந்தத்தொடரை தீர்மானிக்கும் மிக முக்கியமான விஷயமாக அமையலாம்.

உலகின் தலை சிறந்த சுழல்பந்துவீச்சாளராக முரளீதரன் இருந்தாலும் கூட, இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் முரளி பெரிதாக இன்னும் சாதிக்கவில்லை. மற்றொரு ஜாம்பவானும் முரளியின் சமகாலப் போட்டியாளாராக விளங்கியவருமான ஷேன்வோர்னும் இதே போலத்தான். அவர் இறுதிவரை தன்னை இந்தியாவில் வைத்து நிரூபிக்கமுடியாமலே ஓய்வுபெற்றார்.

முரளியால் முடியுமா?

இந்திய மண்ணில் வெளிநாட்டு சுழல்பந்து வீச்சாளர்கள் யாருமே பெரிதாக சாதித்ததில்லை. முரளி, ஷேன் வோர்ன் கூட இதற்கு விதிவிலக்கில்லை. அவ்வளவு தூரம் இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் சுழல்பந்து வீச்சாளர்களை பின்னியெடுத்துவிடுவார்கள்.

முரளிக்கு இதுவே இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக இருப்பதனால் இம்முறையாவது தனது சாதனை முத்திரையைப் பதிக்க விரும்புவார்.

இவ்வாறு முரளியின் சிறப்பான பெறுபேறுகள் வெளிப்படுத்தப்பட்டால், இந்திய மண்ணில் இலங்கை தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை மட்டுமன்றி, தொடர் வெற்றியை பெறவும் சாத்தியமுள்ளது.

மறுபக்கம் இந்தியாவின் துடுப்புச் சீட்டாக சர்ச்சைகளின் மன்னனாக, சர்ச்சைகள், வம்புகளைத் தன் உச்சந் தலையிலேயே முடிந்து வைத்துள்ள ஹர்பஜன் சிங்.

இந்திய மண்ணில் ஹர்பஜன் ஒரு ராஜா! அவரது பந்து ஒவ்வொரு ஆடுகளங்களிலும் பேசி விளையாடும் எனினும் அண்மைக்காலத்தில் ஹர்பஜனின் சர்ச்சைகள் பேசப்படுமளவுக்கு பந்துவீச்சு சாதனைகள் பேசப்படுமளவு இல்லை.


இரண்டாவது சுழல்பந்துவீச்சாளர் தான் இரு அணிகளுக்குமே உள்ள கேள்வி. அமித் மிஷ்ரா, அஜந்த மென்டிஸ் ஆகிய இருவரையும் முந்திக்கொண்டு இடதுகை சுழல்பந்து வீச்சாளர்களான ப்ரக்யான் ஓஜா, ரங்கள ஹேரத் ஆகியோர் அணியிலே இடம்பிடிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. ப்ராக்யான் ஓஜாவின் முதல் போட்டியாக இது அமையும்.

இலங்கை அணித்தெரிவு பற்றிய மற்றொரு விவாதம் - அடுத்த சுழல்பந்துவீச்சாளர் அஜந்த மென்டிசா, ரங்கன ஹேரத்தா என்பதே!

மென்டிஸ் இந்திய அணியைப் பலதடவை சுருட்டி அள்ளியவர்; எனினும் இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரில் இந்திய அணியினால் துவம்சம் செய்யப்பட்டவர்.

ஹேரத் அண்மையில் தன்னை வெளிப்படுத்தியவர். இடதுகை சுழல்பந்து வீச்சாளர் என்பதனால் அணியில் தெரிவுசெய்யப்பட வாய்ப்புக்கள் உண்டு.


இந்தியா முன்னர் மென்டிசுக்கு எதிராகத் தடுமாறியிருந்தாலும், இறுதியாக மெண்டியை இலகுவாகக் கையாண்டிருந்தார்கள். அத்துடன் இடதுகை சுழல்பந்து வீச்சாளர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமம்கொடுத்து வந்துள்ளார்கள் என்பதும் ஹேரத்துக்கு வாய்ப்பாக அமையலாம்.

இலங்கை குழுவில் உள்ள நான்கு விக்கெட் காப்பாளர்களில் மூவராவது முதல் போட்டியில் விளையாடுவார்கள் என்கிறார் அணித்தலைவர் சங்கக்கார.

எனினும் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் என்று சங்கக்காரவினாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட பிரசன்ன ஜயவர்தனவுக்கும், முதல் தடவையாக குழுவுக்குத் தெரிவான கௌஷால் சில்வாவுக்கும் இடையில் போட்டி இருப்பதாக சங்கக்கார நேற்று பேட்டி அளித்திருப்பது ஆச்சரியம்.

கௌஷால் சில்வா துடுப்பாட்டத்திலும் வல்லவர்; A அணிப் போட்டிகளிலும், உள்ள10ர் போட்டிகளிலும் தன்னை நிரூபித்தவர்ளூ எனினும் ஜயவர்த்தனவும் துடுப்பெடுத்தாடக் கூடியவராயிற்றே. ஏன் இந்தக்குழப்பம்? துடுப்பாட்டத்தை பலப்படுத்தவா?


அணியின் சமபலத்தைப் பொறுத்து அணியின் உள்ளடக்கத்தில் பிரசன்ன ஜெயவர்த்தன, சகலதுறை வீரர் அன்ஜெலோ மத்தியூஸ் ஆகியோரின் இடங்கள் தீர்மானிக்கப்படும்.

குழாமிலுள்ள ஏனையோர் தேவைகளுக்கேற்ப உள்ளடக்கப்படுவர் என நம்பலாம். மத்திய வரிசையில் திலின கண்டம்பியும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தரங்க பரண விதாரவையும் - வேகப்பந்து வீச்சாளர்களாக நுவான் குலசேகர மற்றும் திலான் துஷாரவும் தங்கள் இடங்களை எடுத்துக்கொள்வர் என்பது நிச்சயம்.

இந்தத்தொடரில் இலங்கை அணி இன்னொரு சாதனைக்காவும் அதிதீவிர வேட்டையோடு காத்திருக்கிறது. இதுவரை தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மட்டுமே இலங்கையால் டெஸ்ட் போட்டி ஒன்றிலேனும் வெற்றிபெற முடியவில்லை.

இம்முறையாவது இதைச் சாத்தியமாக்கி சாதிக்க முடிகிறதா பார்க்கலாம்!

இன்னொரு கவனிக்கவேண்டிய விஷயம் - இம்முறை எந்தவொரு போட்டியுமே சென்னையிலோ, தென் பகுதிகளிலோ இல்லை (இலங்கை கிரிக்கெட் சபையின் சிறப்பு வேண்டுகோளுக்கிணங்க என்று கேள்வி)

ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் நேரம் இருபதாண்டுகள் கடக்கக் காத்திருக்கும் மற்றொரு சாதனை வீரர் சனத் ஜெயசூரியவை நாம் பார்க்கலாம்.

கணுக்கால் உபாதைக்கு ஆளாகியிருந்த தில்ஷானும் குணமடைந்திருக்கிறார் என்பதும், இந்திய வீரர்கள் எல்லோரும் பூரண சுகம் என்பதும் இரு அணிகளுக்கும் ஆறுதல்.

சங்கா இந்திய மண்ணில் கால்பதித்தவுடன் சொன்னது எனக்கு ஒரு கவிதை போலுள்ளது -

இதுவரை நாம் ஒரு போட்டியிலும் இந்தியாவில் வெல்லவில்லை என்பதால் இறுதிவரை போராடுவோம்;அழுத்தங்கள் இல்லை. இந்தியா இதுவரை தோற்கவில்லை என்பதனால் தோற்காமலிருக்க போராடவேண்டும்;அவர்களுக்கே அழுத்தம் இருக்கிறது.


பிற்சேர்க்கை @ 10:16

ஆரம்பத்திலேயே இலங்கை அணித் தெரிவு மூலமாக ஒரு அதிர்ச்சி..

வழக்கமான ஆரம்ப வேகப்பந்துவேச்சு ஜோடி குலசேகர&துஷாரவுக்குப் பதிலாக அனுபவம் குறைந்த தம்மிக்க பிரசாத்&சானக வெலகெதர அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

வெலகெதர தன்னை அணிக்குள் கொண்டு வந்ததை இன்று இப்போதே எடுத்துள்ள முதல் மூன்று முக்கிய விக்கெட்டுக்கள் மூலமாக நிரூபித்துள்ளார். அவரது line & length அற்புதம்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெலகேதரவை அடுத்த வாஸ் என்று இப்போதே சொல்வது கொஞ்சம் ஓவர் தான் என்ற போதும் கலக்குவார் என்றே தெரிகிறது.
ஆனால் பிரசாத்துக்குப் பதிலாக குலசெகரவையே எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இறுதியாக நடைபெற்ற தொடரில் தொடரின் சிறப்பாட்டக்காரராக தெரிவானவர் குலசேகர.

இந்திய வீரர்கள் புதிய பந்துவீச்சாளர்களுக்கு தடுமாறுவதாலேயே இந்த தெரிவா?
நான் ஊகித்தபடியே ஹேரத் மெண்டிசை முந்திவிட்டார்.

இந்திய துடுப்பாட்ட முன்வரிசை சரிந்துவிட்டது.
சச்சினும் போயே விட்டார். இந்த மைதானத்தில் இலங்கை அணிக்கெதிராக சச்சின் விளையாடியுள்ள நான்கு இன்னிங்க்சில் மொத்தமாகப் பெற்றுள்ளது 54 ஓட்டங்கள் மட்டுமே.

இதே விதமாக இலங்கை தொடர்ந்து பந்துவீசினால்.. இலங்கை சரித்திரம் படைக்கும்..
அடடா.. அடுத்த விக்கெட்டும் போயே போச்சு..

India 32/4...


இலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்கப்போவது யார்?

11/16/2009 12:15:00 AM

(9) Comments

இன்று (இதைப் பதிவேற்றும்போது நள்ளிரவு தாண்டிவிட்டதே..) அஹ்மேதாபாத் மைதானத்தில் ஆரம்பமாக உள்ள இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் பற்றிய என் முன்கூட்டிய (ரொம்பவே முன்கூட்டிய )ஆய்வு சனியன்று வெளியான இருக்கிறம் இதழில் வெளியாகி இருக்கிறது.

படங்களைக் கிளிக்கி கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்..






வாசிச்சீங்களா? இந்திய அணி அறிவிக்க முன்பாகவும், இலங்கை அணி இந்தியாவில் கால் பாதிக்கும் முன்பாகவும் ஆராய்ந்து,ஊகித்து எழுதப்பட்ட கட்டுரை இது..
அச்சுக்கு முன்கூட்டியே அனுப்பவேண்டும் என்பதால் அவர்கள் அவசரத்துக்கு நான் எழுதியது..

எனது ஊகங்கள் அனேகமாக பொய்க்கவில்லை.
எனினும் இடையில் நிகழ்ந்த சில விஷயங்கள், சில முக்கிய தகவல்களோடும் மேலும் புதிய விஷயங்களோடும் காலையில் போட்டி ஆரம்பிக்குமுன் விரிவான அலசல்+ஆய்வு பதிவு வரும்..

அழகாக பக்க வடிவமைப்பு செய்துள்ள 'இருக்கிறம்' குழுவினருக்கும், இதனைப் பதிவேற்றும் விதத்தில் அழகாக மாற்றும் உத்தி சொல்லித் தந்த நண்பர் ஆதிரைக்கும் நன்றிகள்.




சச்சின் டெண்டுல்கர் - 20

11/14/2009 08:15:00 PM

(15) Comments


நாளைய தினத்தோடு சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளை விளையாட ஆரம்பித்து இருபது வருடங்களைப் பூர்த்தி செய்கிறார்.அதை முன்னிட்டான ஒரு பார்வை..

சச்சின் டெண்டுல்கர் - 20

எந்தத்துறையில் வேண்டுமானாலும் இருபதாண்டுகள் இருந்துவிட்டும் போகலாம்; 20 ஆண்டுகளையுமே சாதிக்கும் ஆண்டுகளாக மாற்றலாம் ஆனால் விளையாட்டுத்துறையில் 20 ஆண்டுகள் என்பது இரு தசாப்தகாலம் இரண்டு தலைமுறைக்கான காலம்.

10 ஆண்டுகள் ஒரு விளையாட்டில் நீடிப்பது என்பது பெரிய விஷயமாகிவிட்ட இந்த காலப்பகுதியில் 20 வருடங்கள் அதுவும் சறுக்காமல் பயணிப்பது என்பது இமாலய சாதனையே தான்!

1990களிலிருந்து இன்று வரை சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் இல்லாமல் கிரிக்கெட்டை யோசிக்க முடிகிறதா?

அவரது ஒவ்வொரு ஆட்டங்களும், சதங்களும், அபார ஆட்டங்களும் மறக்கமுடியா விம்பங்களாக மனதில் நிற்பவை. யாரும் எந்த அணியின் ரசிகராக இருந்தாலும் சச்சினை ரசிக்கிறாரோ இல்லையோ, சச்சினின் ஆட்டங்களை துடுப்பாட்டப் பிரயோகங்களை ரசிக்காமல் இருக்கமாட்டார்கள்.

அந்த MRF துடுப்பு.. இப்போது Adidasஆக மாறிவிட்டது.
இந்திய கொடி பொறித்த ஹெல்மட்..
பந்துகளை பறக்கவைக்கும் துடுப்பாட்ட அடிகள்..
சுருள் சுருளான கற்றை முடி..
சீரான பல்வரிசையுடனான பளீர் புன்னகை..
பணிவு தொனிக்கும் பெண் தன்மை கலந்த பேச்சு..
கிரிக்கெட்டின் இரு தசாப்த கால மறக்க முடியா பிம்பங்களின் அடையாளங்கள் இவை..
16 வயதில் பள்ளி பருவத்துப் பாலகனாக சர்வதேசக்கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் இன்று கிரிக்கெட் சரித்திரத்தில் துடுப்பாட்ட சாதனைகளில் மிக பெரும்பான்மையானவற்றுக்கு உரிமையாளராக விளங்குகின்றார்.

உலகத்தில் மிக சிறந்த கிரிக்கெட் துடுப்பாட்ட வீரராகவும், விளம்பரங்களில் வசூல் சக்கரவர்த்தியாகவும் கிரிக்கெட் உலகத்தில் அத்தனை பேரினதும் மதிப்பையும் பெற்ற ஒருவராக சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார்.

சாதனைகள் சிறுவயதில் இருந்தே பழகப்பட்டதோ என்னவோ அடக்கமே உருவானவராகவும் சர்ச்சைகள் குறைவானவராகவும் சச்சின் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

1988 – 1989 பருவ காலத்தில் பாடசாலைகளில் படித்துக்கொண்டிருந்த போதே பாடசாலை கால நண்பரான வினோத் கம்ப்ளியுடனான துடுப்பாட்ட இணைப்பாட்டம் மூலமாக உலகப்புகழ் பெற்ற சச்சின், அந்த வருடமே மும்பாய் பிராந்திய அணிக்கு தெரிவுசெய்யப்படுகிறார்.
இவர் தெரிவுசெய்யப்பட்டது ஒரு சுவாரஸ்யமான கதை.


மும்பாய் அணியின் பயிற்சி குழாமில் இவரும் இணைந்திருந்த வேளையில் வீரர்களுக்கு பந்து வீசிக்கொண்டிருந்த அப்போதைய இந்திய அணியின் சகல துறை வீரர் கபில்தேவின் பந்துகளை இவர் கையாண்ட விதத்தைப் பார்த்து ஈர்ப்புக்குள்ளான அப்போதைய மும்பாய் அணியின் வீரரும் முன்னாள் இந்திய அணியின் தலைவரான துலீப் வென்சாக்கர் சச்சின் டெண்டுல்கரை மும்பாய் அணியில் இணைக்க, முதல் போட்டியிலே குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்து மிக இளவயதிலேயே முதல்தர போட்டி ஒன்றில் அறிமுகத்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பதித்து கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்ப வைத்தவர் சச்சின்.

இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வருடத்திற்குள்ளாகவே சச்சினுக்கு சர்வதேச அறிமுகத்திற்கான அழைப்பு கிடைத்தது. அதுவும் இந்தியாவின் பரம வைரிகளான பாகிஸ்தானிய அணிக்கெதிராக பாகிஸ்தானிய மண்ணில் இடம்பெற்ற சுற்றுலாவிற்கு சச்சின் அழைத்து செல்லப்பட்டதும், அங்கு தன்னை பாலகன் என்று கேலி செய்தவர்களுக்கு துடுப்பினால் பாடம் கற்பித்ததும் உலகத்தில் மறக்கமுடியாத கிரிக்கெட் வரலாற்று நிகழ்வு.

பின்னாளில் உலகையே அச்சுறுத்திய பந்துவீச்சாளராக மாறிய பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் வக்கா யூனிஸ் அறிமுகமானதும் இதே தொடரில். இதுபோல இந்த தொடரில் எழுபதுகளில் அறிமுகமான நட்சத்திரங்களான கபில்தேவ், இம்ரான்கான், ஜவட் மியன்டான் ஆகியோரும் 80களில், 90களில் உலகை கலக்கிய பல வீரர்களும் இன்று வரை கிரிக்கெட்டில் சாதனையாளராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் இணைந்துகொண்டது, தலைமுறை இடைவெளிகளை தாண்டிய ஒரு தொடராக இது அமைந்தது. அத்தோடு இளவயதாக இருந்தாலும் சச்சின் டெண்டுல்கர் காட்டிய நிதானம். முதிர்ச்சி ஆகியன பல கிரிக்கெட் வீரர்களையும் விமர்சகர்களையும் சச்சினை அப்போதே எதிர்காலத்துக்கான வீரராக கணிக்க வைத்தது.

அறிமுக டெஸ்ட் தொடரின்போது வக்கார் யூனிஸின் அதிவேக பந்து வீச்சில் சச்சினின் முகத்தில் காயம்பட்டு இரத்தம் வடிந்தபோதும் இரத்தம் தோய்ந்த மேலாடையோடு துடுப்பெடுத்தாடி போராடியது இன்றுவரை பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கும் ஒரு மறக்கமுடியாத விடயம்.

ஒவ்வொரு போட்டியாக ஒவ்வொரு தொடராக ஒவ்வொரு ஆண்டாக சச்சின் தன்னை நிரூபித்துக்கொண்டே வந்தார்.

இந்திய தெரிவாளர்களின் அரசியல் தெரிவுகள், தெரிவு அரசியல், வெட்டுக்கொத்துகளை தாண்டிய ஒருவாரக சச்சின் இத்தனை வருடங்கள் நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் என்றால் அவரது திறமை மட்டுமே.

இந்திய அணிக்குள்ளும், உலகத்தில் பிரபலமான வீரராகவும் சச்சினின் வளர்ச்சி மிக நேர்த்தியானதாகவும் பிரமிக்கத்தக்கதாகவும் அமைந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் நிதானம், அத்தனை விதமான துடுப்பாட்ட பிரயோகங்களையும் மிக நேர்த்தியாக கையாள தெரிந்த பாங்கு, அவராலேயே உருவாக்கப்பட்ட சில புதிய வகை துடுப்பாட்ட பாணிகள் (Improvised shots), எந்த ஒரு பந்தையும் எந்த சூழ்நிலைகளிலும் அடித்து ஆடக்கூடிய அணுகுமுறை, சிகரம் தொட்டப்பின்னும் பயிற்சிகளை தவறாமல் கடைப்பிடிப்பது என்ற பண்புகள் சச்சினின் வெற்றியின் பிரதான தாரக மந்திரங்கள்.
(எனக்கு அண்மையில் வந்த மின்னஞ்சல் ஒன்றில் சச்சினுக்கு சர்வதேச ரீதியில் சாதனைகள் சொந்தமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.)

சச்சின் உலகத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரராக தன்னை நிரூபித்த முதலாவது சந்தர்ப்பம் 17 வயதில் இங்கிலாந்தில் ஓல்ட் ட்ரபொர்ட்(Old Trafford) மைதானத்தில் பெற்றுக்கொண்ட அவரின் முதலாவது சதம். அதைத்தொடர்ந்து உலகத்தின் அதிவேக மைதானத்தில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் பேர்த்(Perth) மைதானத்தில் பெற்ற அபாரமான சதம். இந்த சதத்தை பார்த்த கிரிக்கெட் உலகின் பிதாமகர் சேர்.டொனால்ட் பிராட்மன் சச்சினின் துடுப்பாட்ட பாணி இளவயதில் தான் ஆடிய ஆட்டங்களை ஞாபகப்படுத்துவதாக பெருமையோடு சொல்லியிருந்தார்.

அத்துடன் Little Master என்று முன்பு பிரபலமாக அழைக்கப்பட்ட சுனில் கவாஸ்கரின் செல்லப் பிள்ளையாக ஆனார் Little Master புதிய சச்சின்.

ஆனால் சொந்த மண் இந்தியாவில் வைத்து சதமடிக்க சச்சினுக்கு நான்கு வருடங்கள் எடுத்தன.

தனது 25வது வயதிற்குள்ளாகவே 16 டெஸ்ட் சதங்களை பூர்த்தி செய்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.
எனினும் இப்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை சச்சின் வசம் இருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான விஷயமே. காரணம் சச்சின் தனது முதலாவது ஒருநாள் சதத்தைப்பெற்றது தனது 79வது போட்டியில்தான் ஆனால் (இலங்கையில் வைத்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக) அதற்கு பிறகு வேகம் எடுத்த சச்சின் ஒருநாள் சர்வதேச போட்டியில் மிக சிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்தியதோடு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு தனது இமாலய சாதனைகளை படைத்துவிட்டு இன்னும் பயணித்துக்கொண்டு இருக்கிறார்.

சர்வதேச ரீதியில் 87 சதங்களும், முதலாம் தர போட்டிகளையும் சேர்த்தால் 125 சதங்களையும் பெற்றுள்ள சச்சினின் சாதனைகளை முறியடிப்பதென்றால் இனி ஒரு குழந்தையை 12 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் அரங்குக்கு கொண்டு வந்து எந்த வித காயமும் இல்லாமல் 25 வருடங்களாவது விளையாட விடவேண்டும்.


எத்தனையோ போட்டிகளில் தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி நம்பமுடியாத வெற்றிகளை பெற்றுத்தந்திருந்தும் கூட, சச்சின் தனித்து நின்று போராடி மற்றைய இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பற்ற தனமாக ஆடி தோற்ற போட்டிகள் எத்தனையோ இருந்தும் கூட இன்னும் சச்சினை பலர் சுயநலவாதி என்று முத்திரை குத்துவது எவ்வளவு நியாயமான விஷயம் என்று தென்படவில்லை.

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் தனிப்பட்ட பல சாதனைகள் இருந்தும் இன்னமும் சச்சின் விளையாடும் காலத்தில் இந்தியாவால் உலகக்கிண்ணம் ஒன்றை வெற்றி பெற முடியாமல் போனதும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளாமல் போனதும் அவர் ஓய்வு பெற்ற பின்பும் அவரது நிறைவேறாத ஆசைகளின் நிழலாக இருக்கும் என்பது நிச்சயம்.

சாதனைகளின் நாயகனாக சச்சின் வலம் வந்து கொண்டு இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக சச்சினால் பிரகாசிக்க முடியாமல் போனது. அந்த காலகட்டத்தில் அவரின் தனிப்பட்ட துடுப்பாட்டமும் சோபை இழந்து காணப்பட்டது.

இரு தடவைகள் தலைவராக அவர் பதவி வகித்தும் கூட, இரண்டுமே வெற்றிகளைவிட அதிகமான தோல்விகளையே பெற்றுத் தந்தன.

டெஸ்ட் போட்டிகளில் இருபத்தைந்தில் நான்கில் மட்டுமே வெற்றியைக் கண்ட சச்சின், ஒன்பதில் தோல்விகளையே பெற்றார்.

73 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 43 தோல்விகளையும் 23 வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

இதற்கு சச்சினின் தலைமையை மட்டும் விமர்சிக்க முடியாது.
அந்த நேரம் அசாருதீன் சூதாட்ட சிக்கலில் சிக்கி அணியே தளம்பிக் கொண்டிருந்ததும், பின்னர் தேர்வாளர்கள் வீரர்களை மாற்றி மாற்றி விளையாடியதும் கூட காரணங்களாக இருக்கலாம்.

சச்சின் மிக இளம் வயதில் தலைமையை ஏற்றுக் கொண்டதும் அவர் மீது அதிக அழுத்தங்களைக் கொண்டுவந்திருக்கலாம்.

இவை அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில கறுப்பு புள்ளிகள்.

கிரிக்கெட் உலகில் சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டால் அதை வைத்துக்கொண்டே பல கிரிக்கெட் மைதானங்களின் சுற்றளவை உருவாக்கமுடியும்.

இத்தனை சாதனைகள் இருந்தும் அவர் தனது பெயரை கெடுத்துக்கொள்ளும் அளவிற்கு தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கவில்லை. இது அவரின் கனவான் தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணம்.

சச்சினின் இன்னொரு அதிகம் பேசப்படா திறமை அவரது சாதுரியமான, சகல வித திறமைகளும் அடங்கிய பந்துவீச்சு..
எத்தனை வித்தைகள் அவரது பந்துவீச்சிலே..

எனினும் என்ன காரணமோ அவரது பந்துவீச்சு அதிகம் பயன்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்துவருகிறது.
அசாருதீன் அணித் தலைவராக இருந்தபோது சச்சினை ஒரு பந்துவீச்சாளராகப் பயன்படுத்தி வெற்றிகண்ட போட்டிகள் பல.
எனினும் பின்னர் வந்த கங்குலியோ, அல்லது சச்சின் தானாகவோ சச்சினைப் பயன்படுத்தவில்லை.இப்போது அடிக்கடி தொல்லை கொடுக்கும் அவரது முழங்கை அவரை பந்துவீச அனுமதிப்பதில்லை.
இதனால் கிரிக்கெட் உலகு சகலவிதமாகவும் பந்துவீசக் கூடிய அற்புதப் பந்துவீச்சாளர் ஒருவரை இழந்துள்ளது.


இதுபோல 20 வருடங்களாக உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துள்ள சச்சின் தன் நீண்டகால கிரிக்கெட் பயணத்தை திட்டமிட்டு உறுதிப்படுத்திக் கொண்டது இவ்வகையான தகுந்த பேணி காத்தல் நடவடிக்கை மூலமாக தான். இந்தக்கால இளைய வீரர்களுக்கு இது ஒரு தகுந்த வழிகாட்டலாக அமைகிறது. அளவுக்கதிகமான பணம், விளம்பரம் மூலமாக வந்து சேர்ந்தாலும் கிரிக்கெட் உலகு சச்சினை கடவுளாக மதித்தாலும் அந்த தலைக்கனம் தலையில் ஏறாதவாறும் சக வீரர்களோடும் மிக எளிமையாக பழகி நடந்துகொள்வதும் சச்சினை இன்னமும் இந்திய அணியின் ஒரு முக்கிய தூணாக வைத்திருக்கிறது.

கிரிக்கெட்டை எவ்வளவு அர்ப்பணிப்போடு சச்சின் நோக்கினார் என்பதற்கு பல உதாரணங்கள்..
அவற்றுள் இரண்டு -
1999 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது தந்தையார் இறந்துவிட, வந்து இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டுவிட்டு அடுத்த நாளே புறப்பட்டு மீண்டும் இந்திய அணிக்காக மாபெரும் சதம் ஒன்றை அடித்தது அதை தந்தைக்கு அர்ப்பணம் செய்தது.

ஓய்வு என்று எந்தவொரு தொடரிலிருந்தும் விலகியதில்லை.. (இப்போது வந்த நண்டு சுண்டானேல்லாம் ஒரு வருடத்துக்குள்ளேயே ஓய்வு என்று சில தொடர்களில் இருந்து கழன்று கொள்வதைப் பார்க்கும்போது சச்சின் உண்மையில் கடவுள் தான்)


தனது சர்வதேச கிரிக்கெட் ஆயுள்காலத்தை மேலும் அதிகரிப்பதற்காக Twenty 20 சர்வதேச போட்டிகளில் தானாக விலகிக்கொண்ட சச்சின் அடிக்கடி அண்மை காலமாக உபாதைகள் வந்திருந்தாலும் அதிலிருந்து மீண்டு தன்னை புதுப்பிப்பதிலும் சச்சின் இனி அவ்வளவு தான் என்று அவர் இருக்கும் ஒருசில போட்டிகளுக்குப் பின்பு எழும் விமர்சனங்களுக்கு துடுப்பினாலேயே பதில் சொல்வதிலும் சச்சின் டெண்டுல்கர் தான் ஓய்வுபெறும் காலம் இப்போதைக்கு இல்லை என்பது மிக தெளிவாகவும் உறுதியானதாகவும் காட்டுகிறது.

20 வருடங்களை நாளையோடு சர்வதேச கிரிக்கெட்டில் பூர்த்தி செய்யும் சச்சின் குறைந்த பட்சம் 2011இல் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரையாவது விளையாடுவார் என்பது சச்சினின் மனக்கணக்காகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்துவருகின்றது.

காலம் இதற்கு பதில் சொல்லும்.

இந்தப் பதிவு எமது வெற்றி வானொலியில் அவதாரம் என்ற விளையாட்டு சஞ்சிகை நிகழ்ச்சியில் இன்று ஒலிபரப்பாகி இருந்தது.


சச்சினை நாம் வழமையாகப் பார்த்ததாக இல்லாமல் அரிய பல புகைப்படங்களைப் பார்க்க,பரவசமடைய..






இந்திய அணித் தெரிவு சரியா? சதியா?

11/13/2009 03:11:00 PM

(16) Comments


அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் தந்த தோல்வியிலிருந்து இந்திய அணி பாடங்கள் கற்றதோ இல்லையோ, இலங்கை அணியை எப்படியாவது தோற்கடித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுவதால் உடனடியாக அணிக்கட்டமைப்பை மாற்றக்கூடிய வாய்ப்பும் தேவையும் இந்திய அணிக்கு.

இலங்கை அணியும் தமது அணியைக் கொஞ்சம் மெருகேற்றிக்கொள்ளவேண்டும். எனினும் மும்பை புயலும், மழையும் இலங்கையின் பயிற்சிகளை இன்றுவரை அனுமதிக்கவில்லை.

இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தவரையில் ஒருநாள் அணியைப் போலல்லாமல், உறுதியான, மாற்றங்கள் தேவையில்லாத அணி.

இந்திய வேகப்பந்து வீச்சுத் துருப்புச்சீட்டான சஹிர் கானும் சுகத்துடன் மீண்டும் அணிக்குத் திரும்புவதால் பந்துவீச்சாளர்களிலும் மாற்றங்கள் தேவையில்லை.
தேர்வாளருக்கு அணியின் பதினோருவரைத் தெரிவு செய்வதில் எந்த சிரமும் இல்லைத் தான்.எனினும் பெயருக்காவது பதினைந்து பேரை தெரிவு செய்ய வேண்டுமே.

அங்கே தான் குழம்பி இருக்கிறார்கள்.குழப்பியும் இருக்கிறார்கள்.

இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற டெஸ்ட் சுற்றுலாவான இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுலாவுக்கு அறிவித்த இந்தியக் குழுவிலிருந்து ஒரே ஒரு மாற்றம் தான் செய்துள்ளார்கள்.

முனாப் படேலை வெளியே அனுப்பி யாரும் எதிர்பாராதவகையில் ஸ்ரீசாந்த் என்ற குழப்படிகார பையனை அணிக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

முனாபை வெளியே அனுப்பியதில் இந்திய ரசிகர்கள் பூரண திருப்தியாக இருப்பார்கள்.என்னதான் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தாலும் சர்வதேச மட்டத்தில் சொதப்புவதில் அவருக்கு நிகர் அவரே தான்.

ஆனால் ஸ்ரீசாந்த்?
என்ன சாதித்துள்ளார்? ஏன் எடுத்தார்கள்? வேறு யாருமே இல்லையா?
இறுதியாக இந்திய அணிக்கு ஸ்ரீசாந்த் விளையாடி 19 மாதங்களாகின்றன.

இந்த இடைவெளியில் பத்து போட்டிகளில் வெறும் 28 விக்கேட்டுக்களையே வீழ்த்தியுள்ளார். இறுதியாக விளையாடிய முதல்தர போட்டியில் 23 ஓவர்கள் பந்துவீசியும் விக்கெட் எதனையும் எடுக்கவில்லை.

ஹர்பஜனிடம் அறை வாங்கியதும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி இந்திய கிரிக்கெட் சபையிடம் இறுதி எச்சரிக்கை வாங்கியதையும் தவிர ஸ்ரீசாந்த் என்ற வீணாய்ப்போன விளையாட்டு வீரர் செய்த சாதனைகள் எவையும் இல்லை.

மீள்வருகையில் ஒருநாள் போட்டிகளில் சாதித்த ஆஷிஷ் நெஹ்ராவையோ, சிங், தியாகி அல்லது பிரவீன் குமார் ஆகியோரில் ஒருவருக்காவது வாய்ப்பை வழங்கி இருக்கலாம்.

இன்னும் ஒரு தடவை பிரச்சினையில் மாட்டினால் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அரோகரா.
அணியில் நிச்சயமான இடம் உள்ளவர்களைத் தவிர ஏனையோரான தமிழக வீரர்கள் சுப்பிரமணியம் பத்ரிநாத், முரளி விஜய், பிரக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த் ஆகியோர் நிச்சயமாக விளையாடுவது சந்தேகமே.(யாராவது காயமடைந்தால் அல்லது இறுதி நேர சுகவீனம் ஏற்பட்டால் தவிர )

இந்த நிலையில் தமிழக வீரர்கள் இருவரினதும் தெரிவு பற்றி சில அதிருப்திகள் நிலவுகிறது.
இருவருமே ஓட்டங்களை மலையாகக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.நிச்சயமாக அணிக்குள் அடுத்து வரவேண்டியவர்கள்.
ஆனால் இறுதி அணியில் விளையாட முடியாது.. மேலதிக வீரர்களாக களத்தடுப்பில் ஈடுபட மட்டுமே தேவை என்ற நிலையில் இவர்களை அஹ்மேதாபாத் வரை அழைத்து செல்வதில் அர்த்தமென்ன?

நான் பத்ரியின் ரசிகன் என்ற வகையில் இந்திய அணியில் விளையாடினால் மகிழ்ச்சி தான்.. ஆனால் வாய்ப்பில்லாமல் சும்மா குழுவில் மட்டும் சேர்த்துக் கொண்டு திரிவதில் என்ன இருக்கப் போகிறது?

முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது என்பது இங்கு முக்கியமானது.
இந்தவேளையில் தமிழக அணி ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் முக்கியமான இரு அணிகளை சந்திக்கிறது.

முதலாம் டெஸ்ட் போட்டி நேரத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை பஞ்சாபிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் காலப்பகுதியில் ஹிமாச்சலப் பிரதேச அணியை ஹிமாச்சலத்திலும் சந்திக்கிறது.

தமிழக அணியின் முக்கிய தூண்களை (இருவரும் இப்போது நடைபெறுகின்ற குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் அரை சதங்களை எடுத்துள்ளார்கள்) இல்லாமல் செய்வது ஒரு வகை சதியோ என்றும் தமிழக கிரிக்கெட் நிர்வாகிகள் சிலர் முனுமுனுத்ததாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.

ஆனால் ஸ்ரீக்காந்த் தேர்வாளர் குழுவின் தலைவராச்சே.. எப்படி?

சிலவேளை சேவாக்,கம்பீர்,யுவராஜ் மூவரும் காயங்களைக் காவிக்கொண்டே திரிவதால் எங்கே உடைந்து விழுவார்களோ என்ற பயத்தினாலேயே இவர்கள் குழுவுக்குள் உள்வாங்கப்பட்டார்களோ தெரியாது...

சிலவேளைகளில் போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் நாள் பன்னிரண்டு பேரை மட்டுமே வைத்துக் கொண்டு ஏனைய மூவரையும் தத்தம் பிராந்திய அணிகளுக்கு விளையாட அனுப்புவார்கள் என்ற ஊகமும் இருக்கிறது.


ரஞ்சி கிண்ணப் பக்கமிருந்து இன்னும் சில முக்கிய சுவாரஸ்யத் தகவல்கள்..

'சுவர்' திராவிட், வங்க இளவரசர் கங்குலி, இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாக உள்ள தினேஷ் கார்த்திக் ஆகியோர் அரை சதங்களை அடித்துள்ளார்கள்.

மீண்டும் தேர்வாளரை ஈர்க்கும் முயற்சியில் உள்ள சீகார் தவான், பார்த்தீவ் படேல், வாசிம் ஜப்பர் ஆகியோர் சதங்களை அற்புதமாகப் பெற்றுள்ளார்கள்.

இலங்கை அணிக்கு தான் துரதிர்ஷ்டம். மும்பையில் மூன்று நாட்களும் மழை பயிற்சி செய்யவிடாமல் செய்ய, உள்ளக பயிற்சியில் ஈடுபடும்போது அதிரடி வீரர் டில்ஷான் கணுக்கால் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவரை விளையாட விடாமல் செய்யும் அளவுக்கு இது மோசமில்லை என்ற தகவல் இலங்கை ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.

திங்கள் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கு முன்னர் டெஸ்ட் தொடர் பற்றிய முன்னோட்டம் பதிவாக வரும்..

(என்ன ராசியோ தொடர்ந்து கிரிக்கெட் பதிவாகவே கொஞ்ச நாளைக்கு இருக்கப் போகிறது)




சொடுக்கி இணைக்க...



Related Posts Widget for Blogs by LinkWithin